தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப்பங்கீடுப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தையில், இதுவரை காங்கிரஸ் 28, சிபிஐ 5, மதிமுக 4, ஐயூஎம்எல் 2, மமக 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 11 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக, 2026 தேர்தலில் 20 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளது. இது அக்கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், அதுவே, தொகுதிப்பங்கீட்டில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், இன்னும் தேமுதிக, மநீம, விசிக, சிபிஐஎம் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
கூட்டணி கட்சிகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட, தற்போது கூடுதல் தொகுதி கோருவதாலும், அதிக கட்சிகளை கூட்டணியில் இணைத்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என திமுக தரப்பில் கூறப்படுவதாலும் தொகுதிப்பங்கீட்டில் தொடர் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இதனிடையே, சிபிஐஎம் உடன் ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், 3ம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தொகுதி உடன்பாடு குறித்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகள் என்ற கோரிக்கையை தெரிவித்தோம். ஓரிரு நாட்களுக்குள் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கும் போது தங்களுக்கு மறுப்பது நியாமல்ல எனத் தொடர்ந்து கூறிவந்த சிபிஐஎம் கட்சிக்கு 5 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் சிபிஐஎம் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த சிபிஐஎம் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், இந்த தேர்தலில் சிபிஐஎம்மின் முதல் குறிக்கோள், பாஜக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்துவது தான். அதற்கான பெரும் போரை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்தக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தொகுதி எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் என்றைக்கும் உரிமைகளைக் கடந்து சென்றதில்லை. அந்த அடிப்படையில் தான் திமுக உடனான 3 கட்ட பேச்சுவார்த்தையில் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளைக் கேட்டோம்.
ஆனால் பல்வேறு கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் 5 தொகுதிகளில் சிபிஐஎம் ஒப்பந்தம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.


