தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த 3 தினங்களுக்கு முன் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு கடந்த பிப்.20ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை பெறப்பட்டது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்பாளர் நேர்காணல் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார்.
அதன்படி இன்று (மார்ச் 18) காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விருப்ப மனுக்கள் அடிப்படையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து, போடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வராக ஓபிஎஸ்க்கான நேர்காணல் இன்று நடைபெறவுள்ளது. மேலும், ஆண்டிப்பட்டி தொகுதிக்கு விருப்பமனு அளித்திருக்கும் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்தரநாத்தின் நேர்காணலும் இன்று நடைபெறவிருக்கிறது.
நாளை காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (மார்ச் 20) காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்று மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 21 காலை திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூரிலும், மாலை புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூரிலும், மார்ச் 22ம் தேதி காலை விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கிலும், மாலை திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு, சென்னை மாவடங்களுக்கு நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


