தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கிய பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படமே அவரது கடைசிப் படம் என்று கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேவிஎன் புரொக்டக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், மமிதா பைஜு, பிரியாமணி, பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கலையொட்டி கடந்த ஜன.9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருந்த இப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக குறித்த நேரத்தில் வெளியாகவில்லை.
சென்சார் விவகாரத்தில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்தை அணுகியது தயாரிப்பு நிறுவனம். மறுஆய்வு குழு படத்தைப் பார்த்து பின்பு சென்சார் சான்றிதழ் வழங்கினால் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
இதனிடையே, மறுஆய்வு குழு கடந்த 9ம் தேதி படத்தை பார்க்கும் என தகவல் வெளியானது. ஆனால், கடைசி நேரத்தில், அக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அது ரத்தானது. இதனால் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயின் ஜன நாயகன் திரைப்படத்தை சென்சார் போர்டின் மறுஆய்வு குழு மார்ச் 17ல் பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
அதன்படி, இப்படத்தின் மறுஆய்வு மும்பையில் நேற்று நடைபெற்றகாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் படத்தை மறுஆய்வு செய்துள்ளனர். இதன் போது, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என சரிபார்க்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. `ஜன நாயகன்’ படத்தில் தேர்தல் சம்பந்தமான காட்சிகளும், அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே இனி ஜன நாயகன் படம் குறித்த முடிவை தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் எனவும், படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமான ஜன நாயகன் ரிலீஸ் தேதி தற்போது தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது. இதனால் பட ரிலீஸ் இன்னும் தள்ளிப்போகுமோ என்று அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்து பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


