தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையொட்டி, சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த 15ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, தமிழகத்தில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அதில் ஓரளவு வெற்றியை எட்டியுள்ளது.
அதே நேரம், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் உள்ள அதிமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர் தோல்வியில் முடிந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது. பிரதமர் மோடி கடந்த 1ம் தேதி மதுரை வருவதற்கு முன்பு பியூஷ்கோயல் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் பஞ்சப்பூரில் கடந்த 11ம் தேதி நடந்த என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றிருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இபிஎஸ் உடன் தொகுதி பங்கீடு குறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போது, தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு சாதகமாக உள்ள முக்கிய தொகுதிகளை பியூஷ்கோயல் கேட்டதற்கு இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் எவ்வித முன்னேற்றமுமின்றி தோல்வியில் முடிந்ததால் அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிருப்தி அடைந்து உள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தரப்பில் 35 தொகுதிகள் வரை கோரப்பட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கத்தை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, உதகை, அவிநாசி, திருப்பூர், ஓசூர் தொகுதிகளையும் தென் தமிழகத்தில் நாகர்கோவில், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் பாஜக கேட்பதாக கமலாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கவுண்டம்பாளையம், மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிட அதிமுக-பாஜக என இரு தரப்பும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்பும் சிறிய கட்சிகளுக்காக 8 தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மார்ச் 20ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானதும், வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


