தமிழ்நாட்டில் கடந்த பிப்.18ம் தேதி மாலை பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக ஆகிய பெரிய திராவிடக் கட்சிகளும் ஐயூஎம்எல், மமக போன்ற இஸ்லாமிய மதம் சார்ந்த கட்சிகளும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமாகும். இது தவிர, ஆளுநரும் இப்தார் விருந்து அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், தவெக சார்பில் மார்ச் 18ம் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பார் எனவும் இதில் பங்கேற்க 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இதனால், 1,000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.


