தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் கடந்த 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்து கொண்டதாக விமர்சித்திருந்தார்.
அவரது இத்தகையப் பேச்சினால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், இதற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
தமிழக அமைச்சர் ரகுபதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகத்தினர் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பதாகக் கூறியதுடன், அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் தொகுதியில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ரஜினி சார் அவர்களுக்கு நான் பதிவு செய்யக்கூடியது. உங்களுக்கு நான் சொல்ல வந்த நோக்கம் வேறு; உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால், என்னுடைய வருத்தத்தையும், என்னுடைய மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் வயதில் மூத்தவர். அதற்கான தார்மீகக் கடமை இருக்கிறது. நான் வேறு யாருக்கும் பதில் கொடுப்பதற்கு இங்கு வரவில்லை. அவருடைய அறிக்கையைப் படித்தேன். அவருக்கு ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


