தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, இங்குள்ள அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் ஆகியவற்றில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியை விட, திமுக தலைமையிலான மத சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஒருசுற்று முன்னே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
அதிமுக-பாஜக கூட்டணி இழுபறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடியவே, இபிஎஸ் உடனடியாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்கள் சந்திப்பில், இன்னும் 2 நாட்களில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளார். வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர், மற்ற விவகாரங்கள் உறுதிபடுத்தப்படும்.
அதிமுக விரும்பும் தொகுதிகளை பாஜக விரும்பி கேட்பதில் தவறில்லை. தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்பதற்கான பதிலை ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இதனை தவெகவிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், சாத்தான்குளம் லாக்கப் மரணத்திற்கு திமுக போராட்டம் நடத்தியது. திமுக ஆட்சியில் தற்போது 34 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன என்று கடுமையாகச் சாடினார்.


