தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 18ம் தேதி மாலையில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, தவெக மற்றும் ஐயூஎம்எல், மமக, மஜக உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் அவற்றின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஷவ்வால் மாதத்துக்கான பிறை வியாழக்கிழமை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை.
எனவே ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைவதாகவும், இதனால் நாளை (மார்ச் 20) தமிழகம் முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, புதுச்சேரியிலும் அங்குள்ள அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி, நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


