தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 18ம் தேதி மாலையில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஷவ்வால் மாதத்துக்கான பிறை வியாழக்கிழமை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை.
எனவே ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைவதாகவும், இதனால் நாளை (மார்ச் 20) தமிழகம் முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, புதுச்சேரியிலும் அங்குள்ள அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி, நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06045) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (மார்ச் 20) பிற்பகல் 1:00 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
அதே போல் மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06046) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (மார்ச் 23) காலை 11:15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் 18 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


