அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் பிரபலமானவர்களில் ஒருவராவார்.
இவர் உலகக் கோப்பை கால்பந்து மற்றும் பிஃபா கால்பந்து போட்டிகளில் தனது நாட்டிற்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் பார்சிலோனா, பிஎஸ்ஜி, அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய அவர் தற்போது இன்டர் மயாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டேல் மைதானத்தில் நடைபெற்ற கான்ககேஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி, நாஷ்வில் எஸ்சி அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில், மைதானம் அதிரும் வகையில் மெஸ்ஸி அற்புதமான கோல் ஒன்றை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட 900வது கோல் ஆகும். இது மெஸ்ஸியின் வேகமும், துல்லியமும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
இதன் மூலம், 900 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற வரலாற்று பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். அவர் 1,236 போட்டிகளில் விளையாடி 900 கோல்கள் என்ற சாதனையை எட்டியிருந்தார். ரொனால்டோ இதுவரை 965 கோல்களை அடித்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆனால், 38 வயதான மெஸ்ஸி, ரொனால்டோவை விட 94 போட்டிகள் குறைவாக விளையாடி, 1,142 போட்டிகளில் இந்த இலக்கை அடைந்து, அதிவேகமாக 900 அதிகாரப்பூர்வ கோல்களை அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனை மெஸ்ஸியின் விடாமுயற்சிக்கும், அசாத்தியத் திறமைக்கும் சான்றாக அமைந்துள்ளது.
இவற்றில் 755 இடது கால் கோல்கள், 111 வலது கால் கோல்கள், 30 தலை கோல்கள் மற்றும் 4 இதர கோல்கள் ஆகியவை அடங்கும். மேலும், அணிகளுக்காக அடித்த கோல்கள் கணக்கில் பார்சிலோனாவில் 672, இன்டர் மயாமியில் 81, பிஎஸ்ஜியில் 32 மற்றும் அர்ஜென்டினா அணிக்காக 115 கோல்கள் அடித்துள்ளார்.
இன்டர் மயாமி அணிக்காக அவர் காட்டி வரும் சிறப்பான ஆட்டம், அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மெஸ்ஸி 900 கோல் அடித்து சமநிலையி இருந்த போதும், அந்நிய மண்ணில் கோல் அடித்ததன் அடிப்படையில் நாஷ்வில்லே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலிறுதிக்கு முன்னேறியது. இன்டர் மயாமி அணி வெளியேறியது.
இருப்பினும், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸியின் சாதனையை சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.


