தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிர் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவைக் கடந்து அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவால் 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகரம் அறக்கட்டளை, தமிழ்நாட்டில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, வழிகாட்டுதல் மற்றும் முழுமையான கற்றல் சூழலை வழங்கி வருகிறது.
இதன் மூலம், இதுவரை 6,700க்கும் மேற்பட்ட மாணவர்களை முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளது. இது தவிர, விதைத் திட்டம், வழிகாட்டுதல் மற்றும் விடுதி வசதிகள் மூலம் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி வருகிறது.
கடந்த 20 வருடங்களாக இந்த சேவையை அவர் செய்து வருவதும் அதன்மூலமாக தமிழ்நாட்டில் பல மாணவர்கள் உயர் கல்வி பெற்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூர்யா தனது இந்த சேவைக்கு உத்வேகமாக இருந்தது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தான் எனப் பேசியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபல தெலுங்கு நடிகர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். நடிகர் சிரஞ்சீவி பல ஆண்டுகளாக அவரது பெயரிலான அறக்கட்டளை மூலம் ரத்த தானம், கண் தானம் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்.
இந்த சூழலில், தற்போது சூர்யாவை போல தானும் இலவச கல்வி கொடுக்க போவதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் சூர்யாவை பாராட்டி பேசிய சிரஞ்சீவி, எவ்வாறு தனது முயற்சிகளிலிருந்து சூர்யா உத்வேகம் பெற்று அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி சேவை வழங்கி வருகிறாரோ அதே போல, தானும் சூர்யாவிடமிருந்து உத்வேகம் பெற்று இலவசக் கல்வி சேவையை வழங்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த சேவை நலிந்த மக்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கும் என்றும், பெரியதொரு முன்னெடுப்பாக விரைவில் இது தொடங்கப்பட உள்ளதாகவும் சிரஞ்சீவி உறுதிப்படுத்தினார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மட்டுமின்றி, தேவைப்படும் அனைத்து பகுதிகளிலும் இலவசக் கல்வி சேவை வழங்க திட்டமிட்டு வருவதாகவும் இது பற்றிய முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


