எச்டிஎப்சி, பிஎன்பி மற்றும் பந்தன் வங்கிகள் வரும் ஏப்.1 முதல் புதிய கட்டணங்கள், பணம் எடுப்பதற்கான வரம்புகளை அமல்படுத்த உள்ளன.
ஆங்கில நாளிதழில் ஒன்றில் வெளியான கட்டுரையில், நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி, அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது, எச்டிஎப்சி வாடிக்கையாளர்களில் பலர் டெபிட் கார்டு இல்லாமல் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். ஆனால், வரும் ஏப்.1 முதல், இத்தகைய யுபிஐ அடிப்படையிலான பணம் எடுப்புகள் மாதாந்திர இலவசப் பரிவர்த்தனையின் கீழ் கொண்டு வரப்படும். வரம்பு கடந்த ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
அதன்படி, இலவச பரிவர்த்தனை வரம்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், ரொக்கப் பயன்பாட்டைக் குறைப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.
அடுத்ததாக, பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அதன் டெபிட் கார்டுகளின் பண எடுப்பு வரம்பை பெருமளவில் குறைத்துள்ளது. முன்னதாக, ரூபே பிளாட்டினம் மற்றும் விசா கோல்டு கார்டுகளின் மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது, இந்த வரம்பு பாதியாக, ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முன்னதாக, விசா சிக்னேச்சர் மற்றும் ரூபே செலக்ட் போன்ற கார்டுகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.1,50,000 வரை பணம் எடுக்க முடியும். இது வரும் ஏப்.1 முதல் பாதியாக, அதாவது ரூ.75,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்கள் மூலம் பெரிய தொகையை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போன்று, பந்தன் வங்கியும் அதன் ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 நிதிப் பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக மேற்கொள்ளும் வகையில், இலவச பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. இருப்பு சரிபார்த்தல், பின் எண்ணை மாற்றுதல் போன்ற நிதி அல்லாத சேவைகளுக்கு வரம்பற்ற இலவச வசதி வழங்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்களது கார்டுகளை மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் 3 முறை மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
வங்கிகளின் இந்த முடிவுகள், பொதுமக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய மாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளது. ஏடிஎம் மூலமான பண பரிவர்த்தனையை குறைப்பதன் மூலம் தேவையற்ற கூடுதல் கட்டணங்களை பொதுமக்கள் தவிர்க்கலாம் என்று வங்கி மற்றும் நிதித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


