தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கட்சிகள் அவற்றின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் ஆகிய களப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், சிபிஐ 5, மதிமுக 4, ஐயூஎம்எல், மமக, கொமதேக ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழு நேற்று நேரில் சந்தித்து பேசியது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து தொகுதி உடன்பாடு சம்பந்தமாக பேசியதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கியது, கூடுதலாக சில கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை முதல்வர் தங்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுக அணியில் மார்க்சிஸ்ட் கட்சி நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும். அதே நேரத்தில் 5 என்கிற எண்ணிக்கையை ஏற்க வேண்டும் என்று முதல்வர் கேட்டு கொண்டதாகக் கூறினார்.
மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்தபடி 6 என்ற எண்ணிக்கைக்கு தான் தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், 5 தொகுதிகள் குறித்து மாநிலக்குழு கூடி விவாதித்து பதில் சொல்வதாக முதல்வரிடம் கூறியதாகவும், 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்கும்படி வலியுறுத்தியதாகவும் விளக்கினார்.
இனி, இதுகுறித்த சிபிஐ மாநிலக் குழு கூடி விவாதித்து முடிவை அறிவிப்பதாகக் கூறிய பெ. சண்முகம், திமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம். எதுவும் ரகசியமான உடன்பாடு, ஓப்பந்தங்கள் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, சிபிஐ மாநிலக்குழு 2 முறை கூடிய போது, ஏற்கெனவே போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை விட கூடுதலாக தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம். 2021 தேர்தலில் போட்டியிட்ட 6 என்ற எண்ணிக்கையை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
