வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26 வரை அவகாசம்: தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் கடந்த பிப்.10ம் தேதியுடன் முடிவடைந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிச.19 முதல் பிப்.10ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட் டது.
அதன்படி, பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்கள், voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.77 கோடியாகும். பெண் வாக்காளர்கள் 2.89 கோடி ஆவர். 22-29 வயதுக்குட்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1 கோடியாகவும் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 12.5 லட்சம் பேர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26ம் தேதி வரை அவகாசம் அளித்து தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். தகுதியானவர்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றுமாறு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
