மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த போதிலும், கடந்த ஒரு வாரமாக சரிவடைந்து வந்தது.
கடந்த வாரத்தில் மார்ச் 16ம் தேதி முதல் 21ம் தேதி சனிக்கிழமை வரை (மார்ச் 20 தவிர்த்து) தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.10,640 குறைந்தது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 சரிவடைந்துள்ளது.
இதனால், இன்று சென்னையில் 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600க்கும் கிராமுக்கு ரூ.670 குறைந்து கிராம் ரூ.12,950க்கும் விற்பனையாகிறது.
இதன் மூலம், சந்தை செயல்பட்ட கடந்த 2 (ஞாயிறு விடுமுறை) நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,000 குறைந்துள்ளது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கடந்த 4 நாட்களில் (மார்ச் 18-21) கிலோவுக்கு ரூ.30,000 குறைந்த நிலையில், இன்று கிராமுக்கு மேலும் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வார இறுதி நாளான மார்ச் 21, சவரனுக்கு ரூ.2,640 குறைந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ.5,360 வீழ்ச்சி அடைந்திருப்பதும், அதே போல வெள்ளி விலையும் கடந்த 4 நாட்களில் கிராமுக்கு ரூ.30 குறைந்திருப்பதும் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதை சர்வதேச முதலீட்டாளர்கள் குறைத்துள்ளதால், தங்கம் விலை குறைந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
