ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்.28ம் தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளின் மீது ஈரான் வெறித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிலவும் போர் சூழலால், ஈரான் அதன் ஹோர்மூஸ் நீரிணை வழியான வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 140 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, தேவை அதிகரிப்பினால் அவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளன.
இதன் ஒருபகுதியாக, விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டதால், குறிப்பிட்ட சில இந்திய விமான நிறுவனங்கள் அவற்றின் உள்நாட்டு கட்டணத்தில் ரூ.400, வெளிநாடு செல்லும் கட்டணத்தில் ரூ.1,500 உயர்த்தி அறிவித்தன.
இந்நிலையில், உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு இன்று முதல் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நீக்கியுள்ளதால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் உள்நாட்டு விமான டிக்கெட் விலை உயர்த்தப்படுவதான அறிவிப்பை விமான நிறுவனங்கள் விரைவில் வெளியிடக் கூடும் என்று நிதித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு அதன் கார்பொரேட் நண்பர்களின் விமான நிறுவனங்கள் லாபம் அடையும் நோக்கில் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
