ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளின் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர் சூழல் நிலவுகிறது. இதன் ஒருபகுதியாக, உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 140 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, தேவை அதிகரிப்பினால் அவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும், எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளன.
இந்த போரின் விளைவாக, இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 23) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,842 புள்ளிகள் சரிந்து 72,700 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஏற்கனவே பங்குச்சந்தை சரிவினால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தற்போது மேலும் 2.5% சரிவால் கவலை அடைந்துள்ளனர்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 585 புள்ளிகள் சரிந்து 22,529 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.05 என்ற அளவுக்கு சரிந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று சற்று மீட்சி அடைந்து ரூ.93.90 ஆக உள்ளது.
போர் நீடிக்கும் நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு பங்குச்சந்தை சரிவை சந்திக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
