தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி, புதுச்சேரியில் ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்., மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் இக்கூட்டணியில் தொடர்ச்சியாக இருந்து வரும் விசிகவுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட இதரக் கட்சிகளைப் போன்று கூடுதல் தொகுதி கேட்டு விசிக வலியுறுத்தி வருகிறது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் கூடுதல் தொகுதிகளை இன்னமும் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் விசிக இருப்பதாக திருமாவளவன் வேதனை தெரிவித்திருந்தார்.
அதே போல், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அங்கு காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வராததால், காங்கிரஸ், திமுக தனித்தனியே வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்தன.
அதன் பின்னரே, கூட்டணி முடிவாகி, காங்கிரஸ் 16, திமுக 12, இந்திய கம்யூனிஸ்டுக்கு 1தொகுதி, விசிகவுக்கு 1 தொகுதி ஒதுக்க முடிவானது.
விசிகவுக்கு இதுவரை எந்த தொகுதி என்பதே தெரியாத நிலையில் நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலில் இருப்பதாகக் கூறிய திருமாவளவன், திமுக தரப்பில் ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்தாலும் எந்த தொகுதி என்பது உறுதியாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் விசிக 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிட உள்ளது. தாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


