தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் மந்தகதியில் செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள் அப்பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், டிஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தையில் காங்., மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2019ம் ஆண்டு முதல் இக்கூட்டணியில் தொடர்ச்சியாக இருந்து வரும் விசிக மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மநீம கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதியை கோரி வந்ததால், திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாமல், இழுபறி நிலை நீடித்து வந்தது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் கூடுதல் தொகுதிகளை இன்னமும் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் விசிக இருப்பதாக திருமாவளவன் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு திமுக, வி.சி.க. இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர்.
அதன்படி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில், விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக தமிழ்நாட்டில் மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், அவற்றில் 6 தனித்தொகுதி, 2 பொது தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது என்றார்.
மேலும், நேற்று நடந்த விசிக உயர்நிலை குழு கூட்டத்தில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறுதல், 2028ல் காலியாகும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக 4 தனித்தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டு, காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம், செய்யூர், திருப்போரூர் தொகுதிகளில் அதன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. வானூர் மற்றும் அரக்கோணம் ஆகிய 2 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இம்முறை 8 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.


