மோலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் `த்ரிஷ்யம்’. இந்த வெற்றியின் காரணமாக, இப்படம் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் மாபெரும் ஹிட்டானது.
மேலும், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், சைனீஸ் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெருவெற்றி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் `த்ரிஷ்யம் 2′ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்டது.
இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்தப் படம் ஏப்.2ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய சினிமாவின் முக்கிய வெளிநாட்டுச் சந்தையான வளைகுடா நாடுகளில், மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரினால், பதற்றம் நிலவுவதால் இப்படத்தை தற்போது வெளியிட முடியாத சூழல் உள்ளது.
இதனால் இப்படத்தின் ரிலீஸ் ஏப்.2ம் தேதிக்கு பதிலாக வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படும் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், த்ரிஷ்யம் 3, மே 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அது மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
மோகன்லால், ஜீத்து ஜோசப் தவிர இந்த படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், முரளி கோபி மற்றும் கே.பி. கணேஷ் குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.
அஜய் தேவ்கன் நடிப்பில் தயாராகி உள்ள இப்படத்தின் இந்தி ரீமேக் வரும் அக்.2 ஆம் தேதி வெளியாக உள்ளது.


