தமிழ் திரையுலகில் ஓ மை கடவுளே',டிராகன்’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர் தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்பு #51 நடிப்பில் அதிரடி காதல் படம் ஒன்றை இயக்க உள்ளார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிபி இயக்கவுள்ள தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு முன்பு அஷ்வத்துக்கு தான் கிடைக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் கிடைக்கவில்லை.
அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அஷ்வத் இது குறித்து கூறுகையில், டிராகன் படம் பார்த்து வாழ்த்துவதற்கு அழைத்திருந்த ரஜினி சார், படத்தின் பல விஷயங்கள் குறித்து வெகுவாக பாராட்டியதாகவும், அவருக்கு கதை இருக்குமா எனக் கேட்ட போது, இருக்கிறது சார் ஆனால் கமிட்மென்ட் இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிம்பு படத்திற்கான கதையில் ஒரு இடத்துக்கு மேல் நகர முடியாத சூழல் வந்ததால், ரஜினி சாருக்காக உருவாக்கிய கதையை கூறியதாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்ததால், உணவு சாப்பிடக் கூட செல்லாமல் கதை சிறப்பாக இருப்பதாகவும், குறிப்பாக வில்லன் பாத்திரம் இன்னும் சிறப்பு எனப் பாராட்டியதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அஷ்வத், எல்லாமே நடக்கும் என்ற நிலையில் சில காரணங்களால் அந்த வாய்ப்பு தவறிப்போனது. ஆனால் இந்தக் கதையை வைத்திருங்கள். நான் அல்லது கமல் மாதிரி நபர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் எனக் கூறியதுடன், ராஜ் கமல் நிறுவனத்திற்கும் கால் செய்து இந்தக் கதையை பாராட்டி சொல்லியதாகவும் குறிப்பிட்டார்.
ரஜினி சாருக்கு ஒன்லைன் சொல்லி, அதனை கதையாக 1.45 மணிநேரம் எடுத்து சொல்லி, அது அவருக்கு பிடித்திருக்கிறது என்பதே எனக்கு பெரிய மகிழ்ச்சி எனக் கூறிய அவர், ரஜினி சாரிடம் கதை ரெடியாக உள்ளது என ஞாயிற்றுக் கிழமை கூறியதும், திங்கட்கிழமை காலையில் கதை சொல்ல அழைத்துவிட்டார். சொன்ன நேரத்தை விட சீக்கிரம் செல்லும் பழக்கம் உள்ளதால், அங்கு சென்றால் அதற்கும் முன்பாக அவர் எனக்காக காத்திருந்தார் என்று சிலாகித்து கூறினார்.
மேலும், ரஜினி சார் எப்போதும் இயக்குநர்களை பெரிதும் மதிப்பார். வயது வித்தியாசம் இன்றி வாங்க போங்க என்றுதான் பேசுவார். நான் சென்ற நேரத்தில் முக்கியமான தலைவர் ஒருவர் அவரை பார்க்க வந்திருந்ததால், என்னிடம் 20 நிமிடம் மட்டும் கொடுங்கள் வந்து விடுகிறேன் என சொல்லி மன்னிப்பு கேட்டுப் போனார்.
அப்போது வெளியே காத்திருந்த தலைவரின் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ரஜினி சாரின் மேனேஜர் வந்து `டைரக்டர் கிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க’ எனச் சொல்ல சொன்னதாக சொன்னார். அவரே நேரடியாக சொல்லிவிட்டாரே என்றேன். இல்லை உங்களுக்கு கொடுத்த நேரத்தில், வேறொருவரை சந்திக்க சென்றதும், உங்களை காத்திருக்க வைப்பதும் அவருக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, அதனால் சொல்ல சொன்னார் என்றார்.
ரஜினி சாருக்காக நாள் கணக்காக காத்திருக்க ஆட்கள் இருக்கும் நிலையில், அவர் போன பத்தாவது நிமிடத்தில் மறுபடி மன்னிப்பு கேட்க ஆள் அனுப்புகிறார். அதன் பிறகு, 10 நிமிட தாமதத்திற்கு, அவரே ஐந்து முறை மன்னிப்பு கேட்டுவிட்டார். சினிமாவில் 75 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது ஏன் என அப்போதுதான் புரிந்தது என்று ரஜினியின் பெருந்தன்மையை நினைவு கூர்ந்தார் அஷ்வத் மாரிமுத்து.
