சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மந்தமாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைத்து அதில் தொகுதி பங்கீடு, அது தொடர்பான ஒப்பந்தம் என தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதே நேரம், தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் என அடுத்தடுத்து துரித கதியில் செயல்பட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்த பிறகு இந்த பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து, தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ் முன்னிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போதைய சூழலில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகாவுக்கு என மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாமகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
பாமகவின் பலம் வாய்ந்த கோட்டையாகக் கருதப்படும் வட மாவட்டங்களை மையப்படுத்தி, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி, பாமகவுக்கு திருத்தணி, ஜெயங்கொண்டம், சோளிங்கர், திருப்போரூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் வடக்கு அல்லது மேட்டூர், பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிப்பட்டியும் என்டிஏ கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.
பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள முக்கியத் தொகுதிகளைப் பெறுவதில் பாமக உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம் போன்ற முக்கியமான தொகுதிகளைக் கேட்டு பெறுவதில் பாமக தலைமை முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
