தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட துரிதப் பணிகளினால் தேர்தல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறி நிலை நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, இபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு வரவழைத்து தொகுதி பங்கீட்டை ஓரளவு இறுதி செய்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதே நேரம், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அவர் இதில் கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர், தமாகாவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் கடும் அதிருப்தி அடைந்த ஜி.கே.வாசன், முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதில், பாஜ தலைமைக்கு கட்சியினரின் அதிருப்தியை தெரிவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பாஜ மேலிடத் தலைவர்களை தொடர்பு கொண்டு ஜி.கே.வாசன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இபிஎஸ் உடன் பியூஷ கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், நேற்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இல்லத்துக்கு சென்று ஜி.கே.வாசன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தொகுதி எண்ணிக்கை உறுதியானதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், தமகாவிற்கு 5 சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்படி, அந்த 5 தொகுதிகளிலும் தமாகா வேட்பாளர்கள், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதனிடையே, என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த ஜான் பாண்டியன், தமமுகவுக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பட்டியல் வெளியேற்றத்தின் அறிகுறியாக, முதல் வெற்றியாக பொதுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், விருப்பத் தொகுதி பட்டியலில் பல தொகுதிகளை கேட்ட நிலையில், மன நிறைவோடு செல்வதாகவும், எந்த சின்னம் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
