தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி வரும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது.
தேர்தல் நடக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது.
அதே நேரம், ஒருவேளையும் நடக்காதது போல் இருந்த அதிமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய நிறவடைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தவெக தரப்பில் இருந்து மார்ச் 27ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இன்னும் 4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் வருகை தந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ்ஸை சந்தித்து தொகுதி ஒப்பந்தம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருவர் முன்னிலையிலும் கையெழுத்தானது. அப்போது டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.
அதன்படி, பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் முன்னாள் அமைச்சர்களாவர். அதே நேரம், 16 பேர் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் எடப்பாடி தொகுதியிலும், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், கரூரில் எம்.ஆர் விஜயபாஸ்கர், மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ, சென்னை ராயபுரத்தில் ஜெயக்குமார் ஆகியோர் உள்பட 23 பேர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
