தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு மே 4ம் தேதி முடிவுகள் அறவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த 15ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியிலும் சூடு பிடித்தன.
அதன்படி, திமுக தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தையில் காங்., 28 தொகுதிகளும், சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுகவுக்கு 4, ஐயூஎம்எல், மமக, கொமதேகவுக்கு தலா 2 தொகுதிகள் உள்பட தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
ஆனால், தேமுதிக, விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதனிடையே, மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழு 2 தொகுதிகளில் அதுவும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தெரிவிப்பதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், கமல் தரப்பு அக்கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. இரு கட்சிகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2025ம் ஆண்டு திமுக ஆதரவுடன் கமல் மாநிலங்களவை எம்.பி. ஆனார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிய கமல்ஹாசன், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிரடியாக அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பேட்டரி டார்ச் என்பது வெறும் சின்னம் அல்ல; தங்கள் அடையாளம் எனவும் தொண்டர்களின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், தனக்கு அரசியல் தொழிலல்ல; கடமை. இந்த தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பேன் என்றும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக முதல்வர் ஸ்டாலினிடம் தலைவர் என்ற முறையை கடந்து நண்பர்களாக மனம் விட்டு கூறியதாகக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் தியாகம் என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டு கமலுக்கும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.
