தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, திமுக தலைமையிலானக் கூட்டணியில் தேமுதிக கடந்த பிப்.19ம் தேதி இணைந்துள்ளது.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
அதன் பிறகு, சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைமை அதனை வழங்கியது. இந்த சீட்டை தேமுதிகவின் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு வழங்க கட்சித் தலைமை முடிவெடுத்ததைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி எம்பி.யாகத் தேர்வானார்.
இதனிடையே, கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸுக்கு கூடுதலாக தொகுதிகளை கொடுத்து விட்டு, தேமுதிகவுக்கும் கூடுதல் தொகுதிகளை வழங்க, தங்களை தொகுதிகளை குறைத்து கொள்ளும்படி திமுக தரப்பில் வலியுறுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்து தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் மு.க. ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கூட்டணிக் கட்சிகளைப் போன்றே தாங்களும் விட்டுக்கொடுத்துள்ளதாகவும், எதிர்பார்த்த தொகுதிகளை விட குறைவாகவே பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், விருத்தாசலம் உட்பட 25 தொகுதிகளை விருப்பப் பட்டியலாக கொடுத்திருப்பதாகவும் தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வரும் 27ம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்தார்.
