சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைந்து முடிவுக்கு வருகின்றன.
தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் என அடுத்தடுத்து துரித கதியில் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்த பிறகு இந்த பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து, தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ் முன்னிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுகவுக்கு 1, புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், பாமவுக்கு சேலம் தெற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், ரிஷிவந்தியம், கீழ்வேளூர், பெரம்பூர், செஞ்சி, காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, அம்பத்தூர், விருத்தாச்சலம் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது முதற்கட்டமாக 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.
அதன்படி, கீழ்வேளூர் தொகுதியில் ச.வடிவேல் ராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என்.சேகர், செஞ்சி தொகுதியில் அ.கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
