தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று தெரிவித்த திமுக, அதன்படியே ஐயூஎம்எல், மதிமுக, மமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிடக் குறைவான தொகுதிகளையே ஒதுக்கியது.
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி விலகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னத்தில் நிற்க வாய்ப்பளிக்காததால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒருதொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுககூட்டணி பங்கீட்டு குழுவுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன்அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன்அன்சாரி, தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியிருப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.
அதே போல, திமுக கூட்டணியில் உள்ள தமிழர் தேசம் கட்சி, எஸ்டிபிஐ ஆகியவற்றுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
