அமெரிக்கா நடத்தும் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் ஈரான், சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. இதனால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியா 40க்கும் மேற்பட்ட சர்வதேச வினியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவில் சமையல் எரிவாயு இந்தியா வந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.
எரிபொருள் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், விலையேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு அதிரடியாக ரூ.10 குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி 3 ரூபாயாகவும், டீசல் மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டு பூஜ்ஜியமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், போர் பதற்றம், சந்தை பற்றாக்குறை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய், எரிவாயு விலையின் மீதான “அதிர்ஷ்ட” லாபத்தின் மீது வின்ட்ஃபால் வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், டீசல் ஏற்றுமதி மீதான வின்ட்ஃபால் வரியை லிட்டருக்கு 21.5 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு முடிவானது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் சந்தைப்படுத்துதலில் நஷ்டத்தைச் சந்தித்து வந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுவரை, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை எண்ணெய் நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.
இத்துடன் சேர்த்து, விமான எரிபொருள் மீதான கூடுதல் சிறப்பு கலால் வரிக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வின்ட்ஃபால் வரி லிட்டருக்கு 29.5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாகவும், விநியோகம் தடையின்றி சீராக நடைபெற்று வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் எனவும், எரிபொருளைத் தேக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
