தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் தவெக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக, தனது 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
ஏற்கனவே, முதற்கட்டத்தில் 60 வேட்பாளர்கள், 2ம் கட்டத்தில் 50 வேட்பாளர்கள் என மொத்தம் 110 பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நிறைவு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் அக்கட்சியின் தலைவர் விஜயிடம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வேட்பாளர்களையும் இன்று அறிமுகம் செய்து வைக்க விஜய் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவதில் தாமதமானதால், இறுதி நேரத்தில் இது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருக்கும் அறிமுகக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் முறைப்படி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
சில தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் வேட்பாளர் இழுபறி பிரச்சினையை சரி செய்ய இருப்பதாகவும், தேர்தல் ஆணைய அனுமதியும் கிடைத்தவுடன் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறும் என்றும் பனையூர் தரப்பில் கூறப்படுகிறது.
