தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு தினம், வாக்குப்பதிவுக்கு மறுநாள் என 3 நாட்களும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் தமிழகம் முழுவதும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப். 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி என மொத்தம் நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் இயங்கும் கிளப்கள் என அனைத்து வகையான மது விற்பனை நிலையங்களும் முழுமையாக மூடப்படும்.
மேலும், மதுபான விற்பனைக்கு தடை விதித்திருப்பதுடன், அந்த 4 நாட்களிலும் மது தயாரிப்பு நிறுவனங்கள், மதுபானங்களை வாகனங்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி பரிசுப் பொருட்களாக மதுபானங்கள் வினியோகிக்கப்படுவதைத் தடுக்கவும், வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

