தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட துரிதப் பணிகளினால் தேர்தல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறி நிலை நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, இபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு வரவழைத்து தொகுதி பங்கீட்டை ஓரளவு இறுதி செய்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதே நேரம், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அவர் இதில் கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர், தமாகாவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் கடும் அதிருப்தி அடைந்த ஜி.கே.வாசன், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இல்லத்துக்கு சென்று சந்தித்தார். இதன் போது, தொகுதி எண்ணிக்கை உறுதியானதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், என்டிஏ கூட்டணியில், தமாகாவுக்கு 5 சீட்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்படி, ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஒட்டன்சத்திரம் மற்றும் கும்பகோணம் ஆகிய தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த 5 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார்.
அதன்படி, ஈரோடு மேற்கில் யுவராஜா, ராணிப்பேட்டையில் கார்த்திகேயன், கிள்ளியூரில் நிவின் சைமன், ஒட்டன்சத்திரத்தில் விடியல் சேகர், கும்பகோணத்தில் எம்.ஆர்.அசோக்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இதை தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பும் கட்சியாக பாஜக உள்ளது. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அடுத்தமுறை விரும்பும் சின்னத்தில் போட்டியிடுவதே தமாகாவின் இலக்காகும்.
மீண்டும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலை தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, கூட்டணி கட்சியான பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
