தமிழகத்தில் ஏப்.23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொகுதி ஒப்பந்தம், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது.
அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாதபுரம், ராசிபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, நாதக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு இன்று நடைபெற இருந்த நிலையில், நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதி, இம்முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதால், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தது.
இதுவரை பாஜக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், குமரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தான் சாத்தூரில் போட்டியிடுவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலில் அவர் தொடர்ச்சியாக நெல்லையில் போட்டியிட்டு வருகிறார். இங்கு 2006ல் திமுகவின் மல்லை ராஜா, 2011ல் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றனர்.
அதன் பிறகு, 2017ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த நயினார், 2021ல் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் இந்த தேர்தலில் தொகுதி மாறி சாத்தூரில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
