ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது.
இந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்பட பல நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான இலங்கையில், தேசிய எரிபொருள் வினியோக நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் அரசுத் துறைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கடந்த 1970களில் நடைமுறையில் இருந்த வாரத்தில் ஒரு நாள் கார் பயன்படுத்தாத திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறாக, உலக நாடுகளில் நிலைமை மோசமாகி வருவதால், இந்தியாவிலும் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது “லாக்டவுன் 2026” என்பது நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தும் நிலையில் இந்த லாக்டவுன் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் லாக்டவுன் விதிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை எனவும், உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும் எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் தொடர்பான நிகழ்வுகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா அதன் மீள்திறனை கடந்த காலங்களில் நிரூபித்துள்ளதாக விளக்கம் அளித்த அவர், நாடு தழுவிய ஊரடங்கு தொடர்பான அனைத்து வதந்திகளும் முற்றிலும் ஆதாரமற்றவை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது பொறுப்பற்ற, தீங்கு விளைவிக்கக்கூடிய செயல் எனவும், இது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதாகவும் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே போல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் லாக்டவுன் வதந்தி குறித்து கூறிய போது, இந்தியாவில் மீண்டும் லாக் டவுன் அமலாகும் என சில தலைவர்கள் கூறுவது வதந்தி, அடிப்படை ஆதாரமற்றது. அரசியலுக்காக லாக்டவுன் பற்றி பேசுவது கவலையளிக்கிறது.
கொரோனா காலத்தை போன்று மீண்டும் இந்தியாவில் லாக்டவுன் வராது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை. நாடு முழுவதும் போதுமான அளவு பெட்ரோல் டீசல் கையிருப்பு உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
