அதிமுக தலைமையிலான கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் இடம் பெற்றிருந்தது. இந்த கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், குனியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக புதிய தமிழகம் கட்சியினரிடம் விருப்ப மனு பெற்று, வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறோம். 60 தொகுதிகளை அடையாளம் கண்டு போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தோம். அந்த கூட்டணியில் தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.
புதிய தமிழகம் கட்சி 21 மாவட்டங்களில் உள்ள 120 தொகுதிகளில் வலுவாக இருப்பதால், 12 முதல் 15 இடங்கள் தரவும், தேவேந்திர குல வேளாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு ராஜ்யசபா சீட் தரவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், 5 தொகுதிகள் தருவதாக கூறிய அதிமுகவினர், கேட்ட தொகுதிகளை தராமல், புதிய தமிழகம் கட்சிக்கு பெரிய பலம் இல்லாத திருவிடைமருதூர் போன்ற தொகுதிகளைத் தருவதாகக் கூறினார்கள்.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிமுக அணியில் இடம்பெற எடுத்த முயற்சி, கூட்டணி பேச்சுவார்த்தை நின்றுபோனது தேவேந்திர குல வேளாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அதிமுக எங்களை அவமதித்து விட்டது. எனவே, எங்கள் பலத்தை காட்டும் வகையில், 60 முதல் 70 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளோம்.
ஒருவேளை கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கை, தொகுதிகளை தர அதிமுக முன்வந்தால் மீண்டும் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலிப்போம். தனித்து களம் காண ஆயத்தமாகி வருகிறோம். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
