சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைந்து முடிவுக்கு வருகின்றன.
தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் என அடுத்தடுத்து துரித கதியில் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்த பிறகு இந்த பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து, தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக அவற்றின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டும் வரும் நிலையில், அமமுக வேட்பாளர்கள் பட்டியலை அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அதன்படி, சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருப்பத்தூரில் ஞானசேகரன், ஓட்டப்பிடாரத்தில் சுந்தரராஜன், திருவையாற்றில் வேலுகார்த்திகேயன், பெரியகுளத்தில் கதிர்காமு, காரைக்குடியில் தேர் போகி பாண்டி, திருச்சி மேற்கில் ராஜசேகரன், மன்னார்குடியில் எஸ்.காமராஜ், பூந்தமல்லியில் ஏழுமலை, மடத்துக்குளத்தில் சி.சண்முகவேலு, நாங்குநேரியில் இசக்கிமுத்து உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் கூட்டணியில் இருக்கிறோம்.
எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருள் பெருகி இருக்கிறது. பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை வீழ்த்தவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த பட்டியலில் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), கே.என். நேரு (திருச்சி மேற்கு) உள்ளிட்ட 3 திமுக அமைச்சர் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு (மடத்துக்குளம்), செந்தமிழன் (சைதாப்பேட்டை) உள்பட 5 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு அமமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
