தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகளினால் தமிழக அரசியல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக, தவெக, நாதக, சசிகலா – ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில், பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கேட்ட தொகுதிகள் மற்றும் எண்ணிக்கை கொடுக்காததால், என்டிஏ கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவற்றில் ஒரு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்திலும் புதிய நீதி கட்சி போட்டியிட உள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி வேட்பாளராக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 30ம் தேதி (திங்கட்கிழமை) பாஜக சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாகவும், 2வது வேட்பாளரை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
