19வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் இரு அணியின் வீரர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். பிறகு, கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில், ஆர்சிபி அணி வீரர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா (7), டிராவிஸ் ஹெட் (11) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின், கேப்டன் இஷான் கிஷன் உடன் இணை சேர்ந்து விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டியும் ஆட்டமிழந்த பின் இஷான் கிஷண், ஹென்றிச் கிளாசன் இணை சேர்ந்து ஆர்சிபி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை 97 ரன்கள் விளாசிய நிலையில் கிளாசன் 31 ரன்னில் அவுட்டானார்.
அதன் பின்னும் சிறப்பாக விளையாடி, 38 பந்துகளில், 5 சிக்சர், 8 பவுண்டரி, 80 ரன் எடுத்திருந்த இஷான் கிஷன் அபிநந்தன் சிங் வீசிய 16வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு களமிறங்கிய அனிகேத் வர்மாவின் (18 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி, 43 ரன்) அதிரடி ஆட்டத்தால், ஐதராபாத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு, 201 ரன் குவித்தது.
இதையடுத்து, 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 69 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 61 ரன்கள், அணியின் கேப்டன் ரஜத் படிதார் 31 ரன் எடுத்தார். விராட் கோலி, டிம் டேவிட்(16) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


