தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் தவெக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது.
தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக, தனது 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
ஏற்கனவே, முதற்கட்டத்தில் 60 வேட்பாளர்கள், 2ம் கட்டத்தில் 50 வேட்பாளர்கள் என மொத்தம் 110 பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நிறைவு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் அக்கட்சியின் தலைவர் விஜயிடம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்க விஜய் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவதில் தாமதமானதால், இறுதி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜய் களமிறங்கும் முதல் தேர்தல் என்பதால், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


