தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாதக, ராமதாஸ்-சசிகலா கூட்டணி என இம்முறை 5 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதே போல், ஒவ்வொரு தேர்தலிலும், கட்சிகளின் பெரும் பலமாக அமைந்து வரும் தேர்தல் வாக்குறுதிகளும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவது பல்வேறு தரப்பினரிடம் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்காற்றிய குழு உறுப்பினர்களுக்கு, முதல்வர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். கட்சிக்காக உழைத்தவர்களை பாராட்டும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த மாநில அரசும் இந்தளவுக்கு மாபெரும் சாதனை நிகழ்த்தியதில்லை. தமிழ்நாட்டை கெடுக்க நினைக்கும் கூட்டம்தான் திமுகவை எதிர்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளின் சாதனைகளை விஞ்சும் வகையில் திராவிட மாடல் 2.0 இருக்கும். பாஜக சதியை முறியடித்து மகளிருக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது என்று கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையில்:
15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை ரூ.1,200லிருந்து ரூ.2,000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500லிருந்து ரூ. 2,500 ஆகவும் உயர்த்தப்படும்.
பால் கொள்முதல் விலை ரூ.5 உயர்த்தப்படும்.
அன்னைத் தமிழைப் போற்ற பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும், மொழி வல்லுநர்களையும் கொண்டு சென்னையில் ‘செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
5,000 கோயில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.
தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.2.5 லட்சம் கோடியில் இருந்து, இரு மடங்காக ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
35 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவர்களு லேப்டாப் வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உணவு, தங்குமிட வசதியுடன் தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்படும்.
திருச்சி, மதுரை, சேலம் அருகில் புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தப்படும்.
1.5 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்படும்.
1,000 குழந்தை காப்பகங்கள் உருவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 பேருந்துகள் இயக்கப்படும்.
இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் ரூ.8,000 மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிச்சி, மைக்ரோவேவ் அடுப்பு மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் பழைய பொருட்களுக்கு மாற்றி பெற்றுக் கொள்ளலாம்.
மொழிபோராட்ட வரலாற்றை அறிய பொள்ளாச்சியில் காட்சி கூடம் அமைக்கப்படும்.
நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
பத்திரிகையாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதி வளர்ச்சிகளையும் உறுதி செய்ய .20,000 மதிப்பீட்டில் சிறப்பு வளர்ச்சி திட்டம்.
அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் உருவாக்கப்படும்.
அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் வைஃபை வசதியுடன் டிஜிட்டல் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் நவீன சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக களமிறங்கியுள்ளது. ஹீரோவும் தேர்தல் அறிக்கை தான்; ஹீரோயினும் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


