அஜித்-வெங்கட் பிரபு காம்போவில் இசை சக்ரவர்த்தி யுவன் ஷங்கர்ராஜாவின் இசையில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியிலும் எப்போதும் ரசிகர்களால் கொண்டாப்படும் படமாக சாதனை படைத்துள்ளது.
அண்மையில், இப்படத்தின் 15வது ஆண்டு திரைவிழாவைக் கொண்டாடும் வகையில், கடந்த ஜன.23ம் தேதி 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மீண்டும் வெளியாகி வசூலைக் குவித்தது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் அஜித் சற்று மாறுபட்ட கேரக்டரில் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதனிடையே, விஜய் நடித்த தி கோட் திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. இப்படத்தின் பணிகள் தாமதமாகி வரும் நிலையில், அஜித் குமாரை அவர் சமீபத்தில் சந்தித்தார்.
அப்போது வெங்கட் பிரபு ஆக்சன் திரில்லர் ஜானரில் புதுவகையான கதையை அஜித்திடம் கூறியதாகவும், அந்தக் கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், தொடர்ச்சியாக மங்காத்தா 2 படத்தின் கதையையும் வெங்கட் பிரபு அப்போது அஜித்திடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
இத்தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


