தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக, நாதக, விசிக, பாமக, தமாக, உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 2.77 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் 2.89 கோடியாகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில், நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்கள் 100% சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் பணம், பரிசுப் பொருட்கள் வினியோகிக்கப்படுவதைத் தடுக்கவும், விதிமீறல்கள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் தலா 2,106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.
இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியினர் அங்கு கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றளவில் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
அனைத்து தொகுதிகளிலும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6ம் தேதி இறுதிநாளாகும்.
மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் விடுமுறை என்பதால், மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.
ஏப்.7 (செவ்வாய்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9 (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.


