தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக, நாதக, விசிக, பாமக, தமாக, உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வினியோகிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கண்காணிக்கவும் தலா 2,106 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.
இதனையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுத் தாக்கல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றளவில் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
அனைத்து தொகுதிகளிலும் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6ம் தேதி இறுதிநாளாகும்.
மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் விடுமுறை என்பதால், மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.
ஏப்.7 (செவ்வாய்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9 (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4வது முறையாகப் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு சென்ற அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சாந்தியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, ஏப்.2ம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் முதல்வர், ஏப்.6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


