தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக, நாதக, விசிக, பாமக, தமாக, உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வினியோகிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கண்காணிக்கவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.
இதனையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6ம் தேதி இறுதிநாளாகும்.
இதனையொட்டி, தவெக சார்பில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அலுவலர் கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மாநகரப் பேருந்து பணிமனை அருகே பிரசாரத்தைத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், முதலில் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நம்ம வீட்டு வாசலில் இருந்து தொடங்குவது தானே சிறந்தது. அதன்படிதான் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவாதக் கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றி ஆகணும். அதற்கு தீயசக்தி திமுக தான் காரணம். பாட்டி வயதில் இருப்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியலன்னா எதுக்கு இந்த ஆட்சி, இந்த அதிகாரம் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியமில்லை, இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தது தான் முக்கியம். எப்படி ஸ்மார்ட் ஆக கொள்ளையடித்து ஏமாற்றினார்களோ அப்படி நாமும் ஸ்மார்ட் ஆக விசில் ஊதி அனுப்புவோம். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், உங்களுக்கான தேர்தல், மறக்காமல் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, 4 முனைப் போட்டி, 40 முனைப் போட்டி என உருட்டினாலும் 2 முனைப் போட்டி தான். ஒன்று டிவிகே, இன்னொன்று டிஎம்கே. எவ்வளவு பெரிய வசதியான வாய்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி பரப்புரையை முடித்தார்.
இதைத் தொடர்ந்து தொண்டர்கள் விஜய்க்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கினர். பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.


