தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்திவந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கடையை இரவில் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக 2020 ஜூன் 19ம் தேதி, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
பின்னர் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில், கடந்த 2020 ஜூன் 29ம் தேதி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இதனை கொலை வழக்காக பதிவு செய்த சிபிஐ போலீசார், அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், பால்துரை விசாரணையின் போது இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் பெண் காவலர்கள் பியூலா, ரேவதி மற்றும் எஸ்ஐ ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2,027 பக்கங்கள், 2ம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடியாகின.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தீர்ப்பு வழங்கினார்.
அதில், உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாலேயே காவலர்கள் தாக்கியுள்ளனர். இந்த மரணங்கள் கொலைதான் என தடய அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம், 9 பேரின் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை குற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகிறது. அவர்களது தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறி ஒத்திவைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் அனைவருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மன நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தண்டனை விவரம் அறிவிப்பதற்கு முன்னதாக இறுதி கோரிக்கை குறித்த இரு தரப்பு வாதம் நடைபெற்றது. அப்போது, காவலர்களின் முந்தைய நடத்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி முத்துக்குமரன், பரவலாக கவனிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் தண்டனை விவரத்தை நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் அறிக்கையை கேட்டால் ஏன் தாமதம் ஆகிறது.
அறிக்கை வந்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுளா, ஆயுளா, தூக்கு தண்டனையா என்பதை முடிவு செய்ய முடியும். அறிக்கை தாக்கல் செய்வதில் என்ன தாமதம்?” என கேள்வி எழுப்பி, தண்டனை விவரத்தை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


