தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதே போல், தவெக தலைவர் விஜய் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்சும் சிக்கியது.
கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே 1.05 மணியளவில் தனது பிரசாரத்தை தொடங்கிய விஜய் 1.20 மணிக்கு பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு புறப்பட்டார்.
விஜய் புறப்பட்ட செய்தி அறிந்து கொளத்தூரில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால் 1.20 மணியளவில் பெரம்பூரில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 3.40 மணியளவில் கொளத்தூர் அகரம் சந்திப்பிற்கு சென்றார்.
பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு ஊர்வலமாக தனது பிரசார வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக் கொண்டே சென்றார். கொளத்தூரில் மாலை 3.40 மணியளவில் பேச்சை தொடங்கிய விஜய் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
அப்போது ‘அனைவருக்கும் வணக்கம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரபு அவர்களுக்கு வாக்களியுங்கள்’. பிரபு அவர்கள் வேறு நான் வேறு இல்லை. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். நன்றி என பேசி முடித்தார். கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபு பெயருக்கு பதிலாக பிரபு என்று தவறுதலாக மாற்றி கூறிவிட்டு அங்கிருந்து வில்லிவாக்கம் சென்றார்.
ஆனால் வில்லிவாக்கத்திற்கு செல்லாமல் பாதியிலேயே பிரசாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். கொளத்தூரில் பிரசாரம் செய்ய மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 3.40 மணிக்கு வந்து 3.45 மணிக்கு தனது பிரசாரத்தை முடித்தார்.
போலீசார் குறித்து கொடுத்த குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசார வாகனத்தை நிறுத்தாமல் சாலையில் நடுவே பிரசார வாகனத்தை நிறுத்தி 5 நிமிடங்கள் பேசியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை கொளத்தூரில் நேற்றைய பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார் வீடியோ பதிவு ஆதாரங்கள் உடன் அளித்த புகாரில் தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


