மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


