தமிழில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான `டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றவர் கயாடு லோஹர்.
தற்போது இவர் டொவினோ தாமஸ் நடித்துள்ள பான் இந்தியா படம் `பள்ளிச்சட்டம்பி’யில் நடித்துள்ளார். இதன் மலையாள டீசர் கடந்த 26ம் தேதி வெளியானது. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஏப்.9ம் தேதி வெளியாகிறது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கயாடு கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழில் பேச இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா எனக் கேட்டதற்கு பல மொழிகளில் நடித்து வருகிறேன். நான் தென்னிந்தியாவை சார்ந்தவள் இல்லை. என்னால் முடிந்த வரையில் ஒவ்வொரு மொழியையும் பேச முயற்சிக்கிறேன்.
வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் போது, அதன் மையமே அம்மொழியை பேசுவதுதான். வ்வொரு மொழியையும் கற்றுக் கொள்ள 100% உழைக்கிறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்கள். அடுத்து வரும் போது தமிழ், மலையாளம் மேலும் பிற மொழிகளையும் நன்றாக பேசுகிறேன் என்று உறுபடக் கூறினார்.
மேலும், டிராகன் படத்துக்கு பிறகு, தமிழ் சினிமாவில் அடுத்து நடிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்ப வர வேண்டும் என நினைக்கிறேன். டிராகன் படத்திற்கு பார்வையாளர்கள் கொடுத்த அன்பு பெரியது. இன்னும் வித விதமான கதைகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். சரியான கதை அமைந்ததும் அதனை அறிவிப்பேன் என்றார்.
கன்னடத்தில் `முகில்பேட்டை’ படம் மூலம் திரையுலகில் நடிகையாக அடி எடுத்து வைத்தவர் கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் நடித்த பதோன்பதம் நோட்டாண்டு (பத்தொன்பதாம் நூற்றாண்டு), ஒரு ஜாதி ஜாதகம் மற்றும் தெலுங்கில் நடித்த அல்லூரி, ஃபங்கி ஆகிய படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


