நாடு முழுவதும் 1992ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதமும் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்குவருவது வழக்கமாகும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
அதிலும் குறிப்பாக, ஸ்ரீபெரும்புத்தூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரையும் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.350 ஆகவும், வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,000ல் இருந்து ரூ.3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


