தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவராவார். சமீபகாலமாக, இவர் திரைப்படத்தில் நடிக்க காட்டும் ஆர்வத்தை விட கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெறவுள்ள கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள அஜித் குமார் தயாராகி வரும் நிலையில், அந்த ரேசில் வெற்றி பெற வேண்டி அவரது நண்பர் கார்த்திகேயன் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு செய்து அஜித்துக்கு ருத்ராக்ஷ மாலை வழங்கினார்.
நடிகர் அஜித் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றதால், அவர் கர்ப்பகிரத்தை விட்டு வெளியேற முடியாமல் சிறிது நேரம் விழி பிதுங்கி நின்றார். இதனால் அவர் அவசரமாக சாமி தரிசனம் முடிக்க வேண்டியதாயிற்று.
பின்னர், பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவர் நீலாங்கரை வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
இதனிடையே, அஜித் பிரியாணி சமைக்க உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மகாபலிபுரம் ஓட்டல் ஒன்றின் சமையலறையில் வெளிர் நீல டி-ஷர்ட், கையில் உறையுடன் அஜித் பிரியாணி தயார் செய்ய இறைச்சியை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் போடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அப்போது அவரது மனைவி ஷாலினி நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா? எனக் கேட்டவுடன் சுற்றிலும் இருந்தவர்கள் கலகலவென்று சிரித்தனர்.
பின்னர், ஷாலினியின் நண்பர் ஒருவர் செல்பி எடுக்கும் போது, அஜித் இங்க பாரு என்று ஷாலினி கூற, எங்கு என்று தெரியாமல் நாலா பக்கமும் பார்க்கும் அஜித் எங்கே? என்று கேட்க, மேலே என்று சொன்னதும் மேல்புறம் பார்க்க செல்பி எடுப்பவர் உள்பட அனைவரும் மீண்டும் சிரித்தனர்.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக் போடுவதுடன் நில்லாமல், அஜித் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.


